Thursday 4 March 2021

ஆட்டு எரு

ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல், 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்துக்கு, 500 கிலோ முதல், 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால், ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம்.ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது, எருவில் தழைச்சத்து அளவு குறைந்தே இருக்கும். ஆட்டின் சிறுநீரில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருக்கும்.




புழுக்கையில் நுண்ணூட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளன. எனவே புரதச்சத்து மிக்க தீவனங்களான குதிரைமசால், முயல்மசால், வேலிமசால், சூபாபுல், தட்டைப்பயறு போன்றவற்றை, ஆடுகளுக்கு கொடுத்தால் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு, ஆட்டு எருவில் அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில், 60 முதல் 70 சதவீதம் தண்ணீர் சத்தும், 2 சதவீதம் தழைச்சத்தும், 0.4 சதவீதம் மணிச்சத்தும், 1.7 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளன.

ஆழ்கூள முறை உர உற்பத்திஇம்முறையில் கொட்டகையின் நிலப்பரப்புக்கு, ஆழ்கூளமாக நிலக்கடலைத் தோல், துண்டிக்கப்பட்ட வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்கழிவு போன்றவற்றை பயன்படுத்தலாம்.


ஆடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம், தண்ணீர் தேவைக்கேற்ப கொடுப்பதால், ஆடுகள் நன்கு உட்கொண்டு, அதிக புழுக்கை மற்றும் சிறுநீரை வெளியேற்றுகிறது.

ஆழ்கூளத்திலுள்ள ஈரத்தன்மையைப் பொறுத்து, 3 முதல் 4 வருடத்துக்கு ஒரு முறை, ஆழ்கூள எருவை எடுத்துக் கொள்ளலாம். 


இந்த முறையில் பத்து ஆடுகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு, இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இந்த எருவில், 50 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும். ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து, மெதுவாக வெளிப்படுவதால் பயிர்களின் தேவைக்கேற்ப, தழைச்சத்து சீராக கிடைக்கிறது.

வீடுகளில் மண் தொட்டி மற்றும் பாலித்தீன் பைகளில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், இந்த ஆழ்கூள எருவை பயன்படுத்தி, களைகளற்ற நாற்றங்கால் அமைத்து, நல்ல தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம். ஆழ்கூள உரத்தை தென்னை, வாழை, தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களின் நாற்றங்காலில் இட்டு, களைகளின் அளவைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம்.