Friday 16 January 2015

தென்னைக்கு இடையில் வாழை...

சாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்... என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில், இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்... விசாககுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-குளச்சல் சாலையில் ஆசாரிப்பள்ளம் என்ற ஊரிலிருந்து, இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பாம்பன்விளை. தென்னை, வாழைகளுக்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது, விசாககுமாரின் இயற்கைத் தோட்டம். தோட்டப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள, உற்சாகமாய் பேசத் துவங்கினார்.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
''விவசாயம் எங்க குடும்பத்துக்கு பூர்விகத் தொழில், என் கூடப் பிறந்தவங்க எல்லாருமா சேர்ந்து விவசாயம் பண்ணிட்டு இருந்தோம். தனியா வீட்டு மொட்டை மாடியிலயும் தோட்டம் போட்டிருந்தேன். தோட்டத்தில் தெளிச்சது போக மிச்சமீதி இருக்குற ரசாயனத்தை வீட்டுத்தோட்டத்தில் தெளிப்பேன். இதைப் பார்த்த என் மனைவி சுஜாதாதான், 'ஏங்க இப்படி ரசாயனத்தை வாரி கொட்டுறீங்க. இது உடலுக்கும் கேடில்லையா?’னு அடிக்கடி கேப்பாங்க. அதனாலதான் இயற்கை விவசாயம் பத்துன தேடல் உருவாச்சு. அதை, 'யாருகிட்ட கத்துக்கிடறது?’னு குழம்பிட்டு இருந்தப்பதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. எதார்த்தமா ஒரு தடவை பஸ்ல போறப்போ படிக்கக் கிடைச்ச 'பசுமை விகடன்', இன்னிக்கு என் சுவாசமாவே மாறிப் போச்சு.
'பசுமை விகடன்' நடத்தின சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். தொடர்ந்து பசுமை விகடனைப் படிச்சுட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் புதுசா கத்துக்கிட்டேன். நாகர்கோவில்ல இருக்கற 'ரூரல் அப்லிஃப்ட் சென்டர்'லயும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் எடுத்தேன். 'என்னதான் பயிற்சி எடுத்துக்கிட்டாலும், அனுபவ அறிவும் வேணுமே’னு இயற்கைக்கு மாற தீர்மானிச்சேன். ஆனால், தொடக்கத்தில் கூட்டுக் குடும்பச் சொத்தா இருந்ததால, இயற்கைக்கு மாறணும்னு சொன்னதும், மத்தவங்கள்லாம் பயந்தாங்க. பாகப் பிரிவினை செஞ்சதும் என்னோட நாலு ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்ப முழுசா இயற்கை விவசாயத்துக்கு வந்து மூணு வருசமாச்சு'' என்று முன்னுரை கொடுத்த விசாககுமார், இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
''இந்த நாலு ஏக்கர்ல, மூன்றரை ஏக்கர்ல தென்னையும், அரை ஏக்கர்ல முந்திரியும் போட்டிருக்கேன். தென்னைக்கு ஊடுபயிரா மூணு ஏக்கர்ல மட்டும் வாழை சாகுபடி பண்றேன். இதுபோக என் தோட்டத்தில பப்பாளி-3, கிராம்பு-7, பலா-7, மா-7, தேக்கு-10, ஆரஞ்சு-2, சப்போட்டா-2 னு மரங்கள் இருக்கு. கொஞ்சம் பனை மரங்களும் நிக்குது. என் தோட்டத்து தென்னை மரங்களுக்கு
35 வயசு ஆகுது. 25 அடி இடைவெளியில மரங்கள் இருக்கறதால, செவ்வாழை, படத்தி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மட்டி, ஏத்தன், பூங்கதளி வாழை ரகங்களைப் போட்டிருக்கேன்.  
நீரை சிக்கனமாக்கும் கேணி!
வாழைக்கு எட்டு அடி முதல், பத்து அடி வரை இடைவெளி விட்டிருக்கேன். ரெண்டு தென்னைகளுக்கு மத்தியில (12 அடி இடைவெளியில்) மூணடி ஆழம், ஒன்றரை அடி அகலத்துக்கு கேணி (குழி) அமைச்சுருக்கேன். தென்னை ஓலை, மட்டைனு கழிவுகளை கேணிக்குள்ளே போட்டுடுவேன். இதனால, என்னதான் அடைமழை பெய்தாலும், ஒரு சொட்டுத் தண்ணிகூட தோட்டத்தை விட்டு வெளியே போகாது. கேணியில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மட்டும் தண்ணீர் விடுவேன். நல்லா வெயில் அடிக்கும்போது தென்னை மர ஓலையின் நிழல், எதுவரை படுதோ, அதுவரை வேர் விட்டிருக்கும். இதனால, பனிரெண்டு அடி தள்ளியிருந்தாலும், கேணியில் இருந்து, தென்னை தண்ணியை உறிஞ்சுக்குது.
இந்தக் கேணிகளுக்கு பக்கத்துலதான் வாழை இருக்கு. ஒரு ஏக்கர்னு பாத்தீங்கனா... 85 தென்னையும், 125 வாழையும் இருக்கும். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். தென்னைக்குனு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல. வாழைக்கு மட்டும்தான் பராமரிப்பு. தென்னையில ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை காய் பறிப்போம். மூன்றரை ஏக்கர்ல ஒவ்வொரு வருஷமும் 3 ஆயிரம் காய்ல இருந்து 4 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்குது'' என்ற விசாககுமார், ஊடுபயிராக வாழை சாகுபடி பற்றி சொல்லத் தொடங்கினார்.
விதைநேர்த்தி முக்கியம்!
'வாழையில் எந்த ரகமாக இருந்தாலும், சாகுபடி காலம் வேண்டுமானால் மாறுமே தவிர, பராமரிப்பு ஒன்றுதான். 2 கிலோ தொழுவுரம், 16 லிட்டர் தண்ணீர், தலா 200 மில்லி சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து அதில் விதைக்கிழங்கை நனைத்து நடவு செய்ய வேண்டும். இந்த அளவு, 100 கிழங்குகளுக்கு சரியாக இருக்கும். நடவு செய்ததும், முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும்... 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
களைகளே மூடாக்கு!
15-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் 20 கிலோ தொழுவுரம் போட்டு, சுற்றியுள்ள களைகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். இதேபோல் 3, 6, 9-ம் மாதங்களிலும் களைகளை வெட்டி தொழுவுரத்தைச் சேர்த்து மூடாக்கிட வேண்டும். 5-ம் மாத இறுதியில், ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி, தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குவதில்லை!
முழுக்க இயற்கை விவசாயம் என்பதால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. பழுப்பு நோய் சில நேரங்களில் எட்டிப் பாக்கும். இந்த நோய் தாக்கிய வாழையின் இலை பழுத்துப் போயிருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில்,
50 மில்லி புளித்த மோர் சேர்த்து விசைத் தெளிப்பான் மூலமாக மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கும் மட்டுப்படாவிட்டால், அடுத்த 15-ம் நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கலந்து தெளிப்பான் மூலமாக தெளித்தால்... பழுப்பு நோய் காணாமல் போய்விடும்.

செவ்வாழையில் ஆப்பிள் நோய் தாக்கும். இந்த நோய் குலை போடுவதற்கு முன்பு வந்தால்... அந்த மரத்தில் குலை தள்ளாது. குலை தள்ளிய பின்பு வந்தால்... காய் சிறுத்து போய்விடும். செவ்வாழைப் பழமும் நிறம் மாறி விடும். இதனால், 40% அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். இலைகள் சிறுத்துப் போவதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த நோய், ரசாயன மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இலை சிறுத்ததுமே தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, கலவையை வாழையின் தூரைச் சுற்றிப் போட்டு தண்ணீர்விட வேண்டும். அதில் மட்டுப்படாவிட்டால்... மீன் குணபம் (மீன் அமினோ அமிலம்) தயாரித்துத் தெளிக்கலாம். செவ்வாழை 10-ம் மாதத்தில் குலை தள்ளி, 12-ம் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்களைப் பொறுத்தவரை 9-ம் மாதத்தில் குலை தள்ளி, 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.
ஆண்டுக்கு ஆறு குலை!
சாகுபடிப் பாடம் முடித்த விசாககுமார், நிறைவாக, ''பொதுவா வாழைக்கு எட்டடி இடைவெளி இருந்தா போதும். படத்தி ரக வாழைக்கு மட்டும் 15 அடி இடைவெளி விட்டிருக்கேன். இதுல பக்கக் கன்னை வெட்ட மாட்டேன். ஒவ்வொரு வாழையில இருந்தும் எட்டு முதல் பத்து பக்கக் கன்னுகள் வரைக்கும் வரும். முதல் வாழையில் ஒன்பதாம் மாசம் குலை தள்ளும். அதிலிருந்து மூணு மாசத்துக்கு ஒரு முறைனு பக்கக் கன்னுகள்ல குலை வெட்டலாம். தார் கொஞ்சம் சிறுசா இருந்தாலும்... வருஷத்துல ஆறு தார் வரைக்கும் கிடைச்சுடும். ஒரு தார் 250 ரூபாய் வரைக்கும் விலை போகுது.
தார் வெட்டினதும், வாழையை அப்படியே விட்டுடுவேன். அது, தானா முறிஞ்சு கீழே விழுந்து மூடாக்காகிடும். என்னோட தோட்டத்து மகசூலுக்கு மூடாக்குதான் மூல மந்திரம். வாழை குலை தள்ளின உடனே, தோட்டத்துக்கே நேரடியா வந்து விலை பேசி, ஒப்பந்தம் போட்டுடறாங்க வியாபாரிங்க. செவ்வாழைக்கு எப்பவும் நல்ல விலை கிடைக்குது. ஒரு தார், 350 ரூபாயிலிருந்து
500 ரூபாய் வரைகூட விலை போகும். மத்த ரகங்கள்ல ஒரு தார் 300 ரூபாய்க்குக் குறையாம விலை போகும். எப்படிப் பார்த்தாலும்... லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும். மூணு ஏக்கர்ல ஊடுபயிரா போடுற வாழையிலயே இத்தனை லாபம்கிறது... சந்தோஷமான விஷயம்தானே'' என்றார் உற்சாகமாக.
மீன் அமினோ அமிலம்!
 மீன் அமினோ அமிலம் பயிர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய முக்கியமான கரைசல். இதை வயலில் தெளித்தால்,  பயிர்களெல்லாம் பசுமைக் கட்டி நிற்கும். இந்த மீன் அமினோ அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?  ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவு இவை இரண்டையும் ஒரு வாளியில போட்டு, காற்றுப் போகாத மாதிரி நல்லா மூடி வைக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து வாளியைத் திறந்து பார்த்தால், தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்தத் திரவத்திலிருந்து எந்தக் கெட்ட வாடையும் வீசாது. பழ வாசனை வரும். இப்படி வாசனை வீசினால், மீன் அமினோ அமிலம் நல்ல முறையில் தயாராகிஉள்ளதென புரிந்து கொள்ளலாம். நெல், வாழை, கரும்பு, காய்கறி பழங்கள்னு எல்லாவற்றுக்கும் இதை தெளிக்கலாம். இது மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கி. 10 லிட்டர் தண்ணிரில்
200 மில்லி அமினோ அமிலத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒரு தடவை தயாரித்த மீன் அமினோ அமிலத்தை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். நாய், பூனைனு வீட்டுல வளர்க்கிற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பத்திரமா வைக்க வேண்டும்.


நன்றி: பசுமை விகடன்

No comments:

Post a Comment